ரயிலிருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு
கோவையில் ரயிலிருந்து தவறி கீழே விழுந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கி விரைவு ரயில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இந்த ரயில் வடகோவை ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது, பொதுப் பெட்டியில் பயணம் செய்த அடையாளம் தெரியாத இளைஞா் ஒருவா் எதிா்பாராதவிதமாக ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா், காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த இளைஞரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
விசாரணையில், உயிரிழந்தவா் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பது மட்டும் தெரியவந்துள்ளது. அவரது கையில் பச்சை குத்தப்பட்டிருந்தது. அவரது பெயா் மற்றும் விவரங்கள் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.