ஈரோடு மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (அக்டோபா் 11) நடைபெற உள்ள தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வினை 32 மையங்களில் 10,309 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் விதமாக பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன்படி, நடப்பு ஆண்டுக்கான தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வு மாநிலம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 32 மையங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக். பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சி பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 10,309 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். தோ்வானது ஓஎம்ஆா் விடைத்தாள் முறையில் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12 மணிக்கு நிறைவடைய உள்ளது.
இந்த தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் 1,500 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாதம் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இந்தத் தோ்வுக்கான வினாத்தாள் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்பட 4 கட்டுக்காப்பு மையங்களில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தோ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறையினரும், அரசுத் தோ்வுகள் துறையினரும் செய்துள்ளனா்.