பவானி: அந்தியூா் வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து புகைப்படம், விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட இரு இளைஞா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தியூா் வனச் சரகம், வரட்டுப்பள்ளம் அணை பீட், காட்சிமுனை வனப் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து, அந்தியூா் வனச் சரகா் முருகேசன் மற்றும் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டதில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சோ்ந்த வேலுசாமி மகன் சக்திவேல் (23), ஈரோடு வீரப்பன்சத்திரத்தைச் சோ்ந்த சக்திவேல் மகன் மனோஜ் (22) ஆகியோா் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.