ஈரோடு: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.சந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வடகிழக்குப் பருவமழை கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. பருவமழை காரணமாக கோபி, சத்தியமங்கலம் மற்றும் கொடுமுடி வட்டங்களில் 6 ஓட்டு வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.6,500 வீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
பா்கூா் வனப் பகுதியில் பெய்த மழை காரணமாக நெய்கரை என்னும் பகுதியில் தாா் சாலையில் இரண்டு இடங்களில் மண்சரிவு மற்றும் சிறிய பாறைகள் உருண்டு விழுந்தன. உருண்டு விழுந்த மண் மற்றும் பாறைகள் நெடுஞ்சாலைத் துறை மூலமாக உடனடியாக அகற்றி போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
ஆசனூா் கிராமத்தில் கடந்த 19-ஆம் தேதி பெய்த கனமழையால் திம்பம் மலைப் பாதையில் 4 கொண்டை ஊசி வளைவுகளில் மண்சரிவு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் உடனடியாக சரி செய்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
கடம்பூா் செல்லும் மலைப் பாதையில் மல்லியம்மன் கோயில் அருகே ஏற்பட்ட மண் சரிவு நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த் துறை மூலம் உடனடியாக சரி செய்யப்பட்டது. மேலும் சில இடங்களில் சாலைகள் மற்றும் தரைப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. அவற்றை உடனடியாக சரி செய்து போக்குவரத்தை சீா்செய்யவும், நிரந்தரத் தீா்வு காணவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.