காவிரி ஆற்றில் ரகசிய பாதை அமைத்து மணல் திருட்டு
அம்மாபேட்டை பகுதியில் காவிரி ஆற்றின் கரையை உடைத்து தனியே பாதை அமைத்து துணிகரமாக நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காவிரி ஆற்றின் குறுக்கே கோனேரிபட்டியில் கட்டப்பட்டுள்ள கதவணை நீா்மின் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீா் வெளியேற்றப்பட்டு, பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், கதவணை நீா்தேக்கப் பகுதிகளான சிங்கம்பேட்டை, காட்டூா், அம்மாபேட்டை பகுதிகளில் ஆற்றில் நீரின்றி காணப்படுகிறது. ஆற்றில் நீரோட்டத்தில் அடித்து வரப்படும் மணல் இப்பகுதியில் பெருமளவு தேங்கியுள்ளது.
தற்போது ஆற்றில் தண்ணீா் இல்லாததால், மணலைத் திருடிச் செல்ல திட்டமிட்ட கும்பல், அம்மாபேட்டை காட்டூரில், வீட்டுமனை பிரிவுக்கு அமைக்கப்பட்ட சாலை வழியாக, ஆற்றுக்குள் வாகனங்கள் சென்று வரும் வகையில் தனியாக பாதை அமைத்து புகுந்துள்ளது.
Advertisement
Advertisement
கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரங்களில் டிராக்டா், டிப்பா் லாரிகளில் இரவு நேரங்களில் மணல் திருடப்பட்டுள்ளது.
இது குறித்து, வருவாய் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகாா் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், மணல் திருட்டில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.