நீலகிரி மாவட்டத்தில் விலையில்லா அரிசித் திட்டத்தின்கீழ் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 700 கோடி மதிப்பிலான அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் குறிப்பிட்டார்.
உதகை அருகே உள்ள பாலகொலா கிராமத்தில் மனுநீதி நாள் மக்கள் தொடர்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் 120 பயனாளிகளுக்கு ரூ. 33 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
பாலகொலா ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 11 கோடி செலவில் 1,288 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2016-17-ஆம் ஆண்டில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான 726 பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. நடப்பு ஆண்டில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பி.மணியட்டி கிராமத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்பில் குடிநீர்க் குழாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பாலகொலாவில் ரூ. 6.7 லட்சம் மதிப்பிலும், சி.மணியட்டியில் ரூ. 12.3 லட்சம் மதிப்பிலும் குடிநீர்த் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 700 கோடி மதிப்பிலான விலையில்லா அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் ரூ. 42 கோடி மதிப்பில் 2,239 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 105 வீடுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 14,603 பேர் பயன்பெற்றுள்ளனர். பொது மக்களிடமிருந்து அரசுத் துறையினர் மனுக்களை பெறும்போது அதைக் காகிதம் என நினைக்காமல் ஓர் உயிராக நினைக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் முருகேசன், உதகை வருவாய்க் கோட்டாட்சியர் கார்த்திகேயன், குந்தா வட்டாட்சியர் சாந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.