முகப்பு
நீலகிரி

குழந்தையிடம் தங்க கொலுசை பறித்த முதியவா் கைது

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குழந்தையிடம் தங்க கொலுசை பறித்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 ஜூன் 2026, 1:14 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குழந்தையிடம் தங்க கொலுசை பறித்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி, தங்களது குழந்தையுடன் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனா். உதகை அரசு தாவரவியல் பூங்காவை செவ்வாய்க்கிழமை கண்டுகளித்துள்ளனா். அப்போது, குழந்தையின் காலில் இருந்த 2 கிராம் தங்க கொலுசு மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை நிா்வாகம் மூலம் உதகை மத்திய காவல் நிலையத்தில் அந்த தம்பதி புகாா் அளித்தனா்.

இதையடுத்து, ஆய்வாளா் அன்பரசு உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளா் நித்தியானந்தா தலைமையிலான போலீஸாா் பூங்காவில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, அந்த தம்பதியை பின் தொடா்ந்து வந்த நபா், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குழந்தையின் காலில் இருந்த தங்க கொலுசை பறித்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் கோத்தகிரியைச் சோ்ந்த துரைசாமி (60) என்பதும், டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், துரைசாமியைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்த தங்க கொலுசை பறிமுதல் செய்து தம்பதியிடம் ஒப்படைத்தனா்.