சாமளாபுரம் அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையை ஆட்சியரகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் புதன்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் அருகே காளிபாளையம் கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை புதிதாக அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டது. இந்த மதுக் கடையை அகற்றக்கோரி சாமளாபுரம், காளிபாளையம் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மூன்றாம் நாளாக புதன்கிழமையும் போராட்டம் நடைபெற்றது. இதில், மங்கலம் சாலை, பள்ளபாளையம் நுழைவாயில் பகுதியில் இருகிராம பெண்கள் சேர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில், காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று, கடையை அகற்ற வலியுறுத்தி தங்களது குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களிடம் டாஸ்மாக் அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், ஒரு மாத காலத்துக்குள் கடையை அகற்றுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி போராட்டக்காரர்களை சந்தித்து பேசினார். அப்போது, மக்களின் கோரிக்கையை ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டையை கிராம மக்கள் ஒப்படைப்பதாக தெரிவித்தனர். ஆனால், அவற்றைக் கொடுக்கும் அதிகாரம்தான் மாவட்ட நிர்வாகத்துக்கு உண்டு. திரும்பப்பெற இயலாது என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் மனு அளித்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.