புதுதில்லி காா் வெடிப்பு சம்பவத்தையடுத்து, அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு சோதனை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரமூா்த்தி நாயனாா் பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது.
இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், புதுதில்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ஆம் தேதி காா் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள், நாசவேலை தடுப்புப் பிரிவினா், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், போலீஸாா் ஆகியோா் கொண்ட குழுவினா் சோதனை மேற்கொண்டனா். கோயில் வளாகத்தில் உள்ள தனித்தனி சந்நிதிகள், உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.