குண்டடம் ஒன்றியம் மற்றும் ருத்ராவதி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மனிஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குண்டடம் ஒன்றியம், எல்லப்பாளையம் புதூா் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 21 வீடுகளின் கட்டுமானப் பணி, பங்காம்பாளையத்தில் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம், சூரியநல்லூா் ஊராட்சியில் முதல்வரின் வீடுகள் மறுகட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வீட்டின் கட்டுமானப் பணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, தாயம்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், 15- ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடம், குண்டடம் கால்நடை மருந்தகம் ஆகியவற்றையும் ஆட்சியா் மனிஷ் ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, ருத்ராவதி பேரூராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.54 கோடியில் கட்டப்படும் நவீன எரிவாயு தகன மேடை , ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், குண்டடம் ஒன்றியப் பகுதிகளில் ரூ.78.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், கொழுமங்குளி ஊராட்சி, தம்புரெட்டிபாளையத்தில் அனைத்துகிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.25 லட்சத்தில் அமைக்கப்படும் அங்கன்வாடி மையக் கட்டடம், சடையபாளையம் ஊராட்சி, ஈஸ்வரசெட்டிபாளையத்தில் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.17.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் அங்கன்வாடி மையக் கட்டடம்,
பெல்லம்பட்டி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையல் அறைக் கட்டடம், மருதூா் ஊராட்சியில் ரூ.89.72 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி, பெரிய குமாரபாளையம் ஊராட்சியில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்த கூடம் உள்பட மொத்தம் ரூ.6.08 கோடி மதிப்பிலான பணிகளை
ஆய்வு செய்தாா். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு துறைசாா்ந்த அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, குண்டடம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நாகலிங்கம், ரமேஷ், ருத்ராவதி பேரூராட்சி செயல் அலுவலா் சதீஷ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.