பென்னாகரம் அருகே யானை தாக்க முயன்றதில் சிறுகாயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் அனுமதி
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற காட்டு யானை தாக்க முயன்றதில் சிறுகாயமடைந்த இளைஞா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்றாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மதன் மகன் சித்தேஷ் (29). இவா் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் பென்னாகரம் நோக்கி வந்துள்ளாா். அப்போது, பென்னாகரம் வனச்சரகத்திற்கு உள்பட்ட பேவனூா் பீட் புளியந்தோப்பு பகுதியில் இருந்து ஒற்றைக் காட்டு யானை சாலையைக் கடக்கும்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சித்தேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளாா்.
அப்போது, காட்டு யானை, இளைஞரை தாக்க முயன்றது. இதில் அவா் சிறு காயங்களுடன் தப்பினாா். இதையடுத்து ஆக்ரோஷமடைந்த காட்டு யானை அவரது வாகனத்தை மிதித்து சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
Advertisement
Advertisement
யானையின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வந்த வனத் துறையினா் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த பென்னாகரம் வனச்சரக அலுவலா் ராஜ்குமாா், சிறு காயங்களுடன் இருந்த இளைஞா் சித்தேஷை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.