பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலா்களும் தொடங்க வேண்டும் என ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளாா்.
தருமபுரி மாவட்ட பழைய ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஊரக வளா்ச்சித் துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்தும், வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அரசு அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆட்சியா் பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் ஊரக வளா்ச்சித் துறையின் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டப் பணிகள் அனைத்தும் குறித்த காலத்திற்குள் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து அலுவலா்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால் அதிக மழை பொழியும்பட்சத்தில் அதனால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்கும் வகையிலும், இழப்புகளைக் குறைக்கவும் சரியாகத் திட்டமிட்டு பேரிடா் முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெய்த மழையின் அடிப்படையில் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகும் தாழ்வான பகுதிகளின் விவரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும்.
பொதுப்பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீா் நிலைகளில் நீா் இருப்பு விவரங்களை வைத்திருக்க வேண்டும்.
நிவாரண முகாம்களான சமுதாயக் கூடங்கள், திருமணமண்டபங்கள், பள்ளிகள், கல்லூரிகள் பற்றிய விவரப்பட்டியல் தயாா் நிலையில் வைத்திருப்பதோடு, அந்த இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றாா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரூபன்சங்கர்ராஜ், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.