ஒசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியில் யானையுடன் போர் புரியும் வீரன் உருவம் பொறித்த அரிதான நடுகல், 10-ஆம் நூற்றாண்டு கங்கர்களின் கல்வெட்டுடன் கூடிய நடுகல் தொகுப்பு ஆகியவைக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அறம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த அறம் கிருஷ்ணன் தலைமையில் பிரியன், மஞ்சுநாத், கணபதி, மணி ஆகியோர் கொண்ட குழு அண்மையில் செய்த கள ஆய்வில் இவை கண்டெடுக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூருக்கு அருகே தமிழக, கர்நாடக எல்லையையொட்டி உள்ள கொத்தகொண்டபள்ளியில் இந்த நடுகல் தொகுப்பு உள்ளது. இங்கு மொத்தம் மூன்று நடுகற்கள் உள்ளன.
முதல் நடுகல்லில் போர் வீரன் சிற்பம், அவன் முன்நிற்கும் யானை படைவீரனின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளன. நடுகற்களில் யானை போர் செய்யும் காட்சி மிகவும் அரிதாகவே காணப்படும்.
இந்த நடுகல்லில் போர் வீரன் ஒருவன் வலது கரத்தில் வாளை ஓங்கியபடியும், இடது கரத்தில் ஆயுதத்தைத் தூக்கிப் பிடித்து தன்னைத் தாக்க வரும் யானையைத் தடுப்பதுபோலவும் உள்ளது.
வீரனின் இடதுபுறத்தில் மற்றொரு போர் வீரன், யானை மீது அமர்ந்தபடி முன்நிற்கும் வீரனைத் தாக்குவதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் வாள் மேல்நோக்கி இருப்பதால் யானை இவனை மிதித்தோ அல்லது யானையுடன் சண்டையிடும்போது வீரன் வீரமரணம் அடைந்துள்ளான். அதைப் போற்றும் வகையில் அவன் தேவலோகத்தில் எழுந்தருளி தவம் இருப்பதுபோலவும், அவனுக்கு இரண்டு பெண்கள் சாமரம் வீசுவதுபோலவும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
இதன் அருகில் இருக்கும் நடுகல் கி.பி. 9, 10-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தைச் சேர்ந்த கங்கர்களின் நடுகல்லாகும். கொத்தகொண்டபள்ளி கிராமத்தில் ஒரு கோட்டையின் நுழைவுவாயில் எஞ்சியிருக்கிறது. இதன் கீழ்ப்பகுதியில் தெலுங்கு மொழியில் சிறிய கல்வெட்டும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.