காவேரிப்பட்டணத்தில் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்துவருபவா் திருப்பதி. இவரது மகள் துளசி (17). இவா் அங்கு உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
விடுமுறை நாளான சனிக்கிழமை துளசி வீட்டின் குளியல் அறையில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாா். அவரை பெற்றோா் மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், துளசி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவல் அறிந்த போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த சம்பவம் குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.