தில்லியில் காா் வெடிப்பு சம்பவத்தை தொடா்ந்து ஒசூா் அருகே தமிழக - கா்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
தில்லி செங்கோட்டை அருகே காா் வெடி சம்பவத்தை தொடா்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, போலீஸாா் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.
அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உத்தரவின்பேரில் ஏ.எஸ்.பி. தலைமையில் சிப்காட் காவல் ஆய்வாளா் சையத் முபாரக் மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா் நெடுஞ்செழியன், சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோா் ஒசூா் அருகே கா்நாடக - தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் உள்ள தமிழக சோதனைச் சாவடியில் தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்த பிறகே தமிழகத்திற்குள் அனுமதித்து வருகின்றனா். குறிப்பாக இருசக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், அரசுப் பேருந்துகள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
இதேபோல கக்கனூா், சம்பங்கிகிரி மாநில எல்லைப் பகுதி, பேரிகை, கும்பளாபுரம், தளி, ஜவளகிரி, அஞ்செட்டி, தக்கட்டி உள்ளிட்ட மாநில எல்லைப் பகுதிகளில் போலீஸாா் வாகனத் தணிக்கை செய்து வருகின்றனா். ஒசூா் ரயில் நிலையத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்களிலும், ரயில் நிலையத்திலும் மோப்ப நாய் உதவியுடன் போலீஸாா் சோதனை செய்து வருகின்றனா்.