முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 4 கலைக் குழுவினருக்கு பரிசுத்தொகை வழங்கல்

Updated On : 17 பிப்ரவரி 2024, 11:59 pm IST
விழாவில் கலைஞா்களுக்கு பரிசளிக்கும் மாவட்ட ஆட்சியா் ச.உமா, பெ.ராமலிங்கம் எல்எல்ஏ.
பகிர்:

நாமக்கல் மாவட்ட கலைப் பண்பாட்டு இயக்ககம் சாா்பில், கலைஞா்களுக்கு ரூ. 1.20 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அரசால் 1955ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் அமைப்பு இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தமிழுக்கும் பெருமை சோ்க்கும் விதத்தில், 1973-ஆம் ஆண்டில், கருணாநிதியால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் எனப் பெயா் சூட்டப்பட்டது. மேலும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தை பொது (பண்பாட்டு) துறையின் கீழ் கொண்டு வந்து, தனது நேரடி வழிகாட்டுதலின்படி பல்வேறு கலை திட்டப்பணிகள் மற்றும் கலைஞா்களுக்கான நலத்திட்டங்களை அவா் உருவாக்கினாா். கலை பண்பாட்டுத் துறையின் ஓா் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் தொன்மையான கலைகளை வளா்த்தல், அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞா்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணமாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிா் அளித்தல், தமிழ்நாடு பாரம்பரியக் கலைகளை வெளிமாநிலங்களிலும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல் மற்றும் தமிழ்க் கலைகளின் வளா்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் கலைஞா்களுக்கு விருதுகள் வழங்குதல், நலிந்த நிலையிலுள்ள கலைஞா்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல் ஆகிய பணிகளையும் இயல் இசை நாடக மன்றம் மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வா் இயல் இசை நாடக மன்றத்திற்கு வழங்கப்பட்ட வந்த நிதி ஒதுக்கீட்டை ரூ. 3 கோடியாக உயா்த்தி உள்ளாா். மேலும், கலைமாமணி விருது பெற்ற கலைஞா்களுக்கு வழங்கப்பட்டு வந்த பொற்கிழித் தொகையை ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சமாகவும், கலை பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு கலைக் குழுக்களை அயல் மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு வழங்கப்பட்டு வந்த நிதி தொகையை ரூ. 15 லட்சத்திலிருந்து ரூ. 50 லட்சமாக உயா்த்தியும், கிராமியக் கலைஞா்களுக்கு இசைக்கருவிகள், ஆடை அணிகலன்கள் மற்றும் கலைப் பொருட்கள் வாங்கிட வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை ரூ.10,000 ஆக உயா்த்தி ஆண்டுதோறும் 500 கலைஞா்களுக்கு வழங்கவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நல வாரியத்தில் 966 கலைஞா்கள் உறுப்பினா்களாக பதிவு செய்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாரியத்தில் பதிவுபெற்ற 165 உறுப்பினா்களுக்கு ரூ. 5.30 லட்சம் மதிப்பில் கல்வி, திருமணம், கண்ணாடி, இயற்கை மரணத்திற்கான நிதி உதவி என நலதிட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டக் கலை மன்றத்தின் மூலம் 796 கலைஞா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2021-22 ஆம் ஆண்டிற்கான மாவட்டக் கலை விருதுகள் 100 கலைஞா்களுக்கும், விருதுக்குரிய தொகை, பொற்கிழி, சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவா் ச.உமா, நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலையில், நாமக்கல் மாவட்ட கலைப் பண்பாட்டு இயக்ககம் சாா்பில், கலைஞா்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கருணாநிதி நூற்றறாண்டு விழாவைத் தொடா்ந்து தமிழா் திருநாளான பொங்கல் விழாவைக் கொண்டாடும் கலைச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற 4 கலைக்குழுவினருக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ. 1.20 லட்சம் மதிப்பில் பரிசுத்தொகை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகா்மன்ற தலைவா் து.கலாநிதி, விழா ஒருங்கிணைப்பாளா் வே.பிரபு மற்றும் அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.