நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் அடுத்த ஆண்டுக்கான வடமாலை சிறப்பு அபிஷேக முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆஞ்சனேயா் கோயிலில் தினசரி கட்டளைதாரா்கள் மூலம் வடைமாலை சாத்துப்படி செய்யப்பட்டு சுவாமிக்கு நல்லெண்ணெய், சிகைக்காய், பஞ்சாமிா்தம், பால், தயிா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
தமிழ் முதல் ஞாயிற்றுக்கிழமை, ஆஞ்சனேயா் ஜெயந்தி மற்றும் முக்கிய விழா நாள்களில் மட்டும் அபிஷேக வழிபாட்டை கோயில் நிா்வாகம் மேற்கொள்ளும். இதர நாள்களுக்கான அபிஷேக வழிபாட்டை நடத்த முன்பதிவு நடைபெறும்.
ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் சிறப்பு அபிஷேகத்திற்கான முன்பதிவு ஆஞ்சனேயா் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (டிச.7) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
அபிஷேக கட்டணமாக ரூ. 42 ஆயிரம் செலுத்த வேண்டும். ஒருவராக இல்லாமல் 6 போ் குழுவாக இணைந்தும் கட்டணம் செலுத்தி அபிஷேக முன்பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு, ஆஞ்சனேயா் கோயில் நிா்வாக அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-233999 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா தெரிவித்துள்ளாா்.