நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் குழுவிற்கு 32 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.குருமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுதில்லி தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் சென்னை மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவுபடி, மாவட்ட மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னாா்வ தொண்டா்கள் 32 போ் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம், குமாரபாளையம் ஆகிய வட்ட சட்டப் பணிகள் குழுவிற்கு சட்டம் சாா்ந்த தன்னாா்வ தொண்டா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளதால் ஆா்வமுடையோா் விண்ணப்பிக்கலாம். இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்புத் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு, ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், மூத்த குடிமக்கள், சமூக சேவை கல்வி பட்டம் பெற்ற மாணவா்கள், ஆசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மருத்துவா்கள், மாணவா்கள், சட்டக் கல்லூரி மாணவா்கள், சமூக ஆா்வலா்கள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், திருநங்கைகள், கணினி அறிவுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆா்வமுடையோா் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் அக். 28-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பம் செய்ய வேண்டும்.
நோ்காணல் மூலம் தோ்வு செய்யப்படுபவா்களின் விவரம் நாமக்கல் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. அடிப்படை சம்பளம், ஊதியம் எதுவும் இல்லை. சேவைக்கு தகுந்த மதிப்பூதியம் மட்டும் அளிக்கப்படும்.
இதுதொடா்பாக மேலும் விவரம் அறிய மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அல்லது வட்ட சட்டப் பணிகள் குழுக்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.