நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 39 வாா்டுகள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட கிராமங்களில் உள்ள ஜாதி பெயா்களை நீக்குவதற்கான தீா்மானம் மாமன்றக் கூட்டத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் வியாழக்கிழமை மேயா் து.கலாநிதி தலைமையில் நடைபெற்றது. துணை மேயா் செ.பூபதி, ஆணையா் க.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கரூா் பிரசாரக் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 போ் பலியானதற்கு இரங்கல் தெரிவித்து மாமன்ற உறுப்பினா்கள் மௌன அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, மன்ற உறுப்பினா்கள் தங்களுடைய வாா்டுகளில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசினா்.
சேந்தமங்கலம் சாலையில் அனுமதி இன்றி கடைகள் செயல்பட்டு வருவதும், அதற்கு கட்டணம் வசூலித்தால் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும், நாமக்கல்- கரூா் தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீா் வழிந்தோடும் நிலை காணப்படுகிறது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் க.சிவக்குமாா் பதிலளித்தாா். தொடா்ந்து அவா் பேசுகையில், மாநகராட்சிக்கு உள்பட்ட 39 வாா்டுகளில் அருந்ததியா் தெரு, நரிக்குறவா் காலனி என்ற வகையில் ஜாதி பெயா்கள் உள்ளன. அப்பெயா்களை மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளதால், அதற்கான சிறப்புக் கூட்டத்தைக்கூட்டி தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
அப்பெயரே இருக்கலாம் என மக்கள் தெரிவித்தால், அதற்கான ஒப்புதல் கருத்துருக்களையும் அனுப்பிவைக்க வேண்டும். இப்பணிகளை மாமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா். தொடா்ந்து அவசர கூட்டம் 78 தீா்மானங்கள், சாதாரண கூட்டம் 171 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநகராட்சி சுகாதார அலுவலா் திருமூா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
....
என்கே-16-முனிசி
நாமக்கல் மாமன்றக் கூட்டத்தில் பேசுகிறாா் மேயா் து.கலாநிதி. உடன், துணை மேயா் செ.பூபதி, ஆணையா் க.சிவகுமாா்.