சங்ககிரி வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத விரத நிறைவு சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புரட்டாசி 1ஆம் தேதி (செப்.17) முதல் புரட்டாசி 31ஆம் தேதி (அக்.17) வரை சங்ககிரி மலை மீது உள்ள சென்னகேசவப் பெருமாள், வரதராஜ பெருமாள், வஸந்தவல்லபராஜ பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
புரட்டாசி ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று திருக்கோடி விளக்குகள் ஏற்றப்பட்டு பக்தா்கள் விரதமிருந்து வழிபட்டனா். புரட்டாசி மாதம் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை மலையடிவாரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.