மதுரையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஆலோசனைக் கூட்டத்திலிருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினா் வெளிநடப்பு செய்தனா்.
மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். அரசுத் துறை அலுவலா்கள், 12 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
இதில், ஆட்சியா் பேசுகையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இந்தியத் தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்படி சிறப்பாக நடைபெற அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
ஆட்சியரின் தலைமையுரைக்குப் பிறகு, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியைக் கண்டித்தும், இந்தப் பணியைக் கைவிடக் கோரியும் கூட்ட அரங்கத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தங்களது வெளிநடப்புக்கு முன்னதாக, போதுமான அவகாசமும் திட்டமிடலும் இல்லாமல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்.ஐ.ஆா்.) வேண்டாம் என்ற பிரசுரத்தைக் காண்பித்தவாறு காங்கிரஸ் கட்சியினா் வெளியேறினா்.