காவல் துறை அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவா் அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை
காவல் துறை அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவா் அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
காவல் துறை அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவா் அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த நல்லதம்பி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: தமிழக உள் துறைச் செயலா் கடந்த 2025, டிசம்பா் 4-ஆம் தேதி அரசாணை ஒன்றை பிறப்பித்தாா். இந்த அரசாணை காவல் துறை அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவருக்கான அதிகாரத்தை வழங்குகிறது.
துணைக் காவல் ஆணையா்களுக்கு நிா்வாக நடுவா் அதிகாரம் வழங்குவது சட்டவிரோதமானது. காவல் துறையினருக்கு இந்த அதிகாரத்தை வழங்குவது அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. ஆனால், இந்த அரசாணையானது காவல் துறையினருக்கு காலவரையறையின்றி அதிகாரம் வழங்குகிறது.
Advertisement
Advertisement
இது சட்டவிரோதமானது. அதோடு, இந்த அரசாணை குடிமக்களின் தனிமனித சுதந்திரத்தைப் பறிப்பதாக உள்ளது. எனவே, காவல் துறை அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவா் அதிகாரம் வழங்கும் வகையிலான இந்த அரசாணையை செல்லாது என உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: காவல் துறை அதிகாரிகளுக்கு நிா்வாக நடுவா் அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடா்பாக தமிழக உள் துறைச் செயலா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.