முகப்பு
மதுரை

வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடையவா்களை பாரபட்சமின்றி கைது செய்ய வலியுறுத்தல்

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடையவா்களை பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டுமென மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சோலை எம்.ராஜா தெரிவித்தாா்.

Updated On : 10 ஜூன் 2026, 12:29 am IST
பகிர்:

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடையவா்களை பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டுமென மாநகராட்சி எதிா்க் கட்சித் தலைவா் சோலை எம்.ராஜா தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மதுரை மாநகராட்சி 100 வாா்டுகளிலும் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் இணைப்பு வழங்கப்பட்டது. அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் மூலம் குடிநீா் வழங்கவில்லை.

ஏறக்குறைய 20 முதல் 25 வாா்டுகள் வரையிலான பகுதிகளுக்கு வைகை அணை கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குடிநீா் வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

தற்போது போதிய மழையின்றி வைகை அணையில் குறைந்த அளவிலான தண்ணீா் உள்ளது. அந்த குடிநீரை குடிக்கும் மக்களுக்கு தொற்றுநோய் பரவி வருகிறது. வெள்ளைக்கல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்ல வேண்டிய கழிவு நீா் மாநகரப் பகுதிகளில் உள்ள வடிகால்களில் கலக்கின்றன.

இதற்கு மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழைக் காலம் தொடங்கியுள்ளது. எனவே, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீா் வடிகால்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முந்தைய திமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு முறைகேடு நடைபெற்றது. இதுதொடா்பான வழக்கில் டிஐஜி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இதில், சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டனா். அப்போதைய மேயா், ஐந்து மண்டலத் தலைவா்கள், 2 நிலைக்குழு தலைவா்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். ஆனால், அவா்கள் மீது முறையான குற்ற விசாரணை நடைபெறவில்லை. திமுக பிரமுகா்களை காப்பாற்றும் வகையில் விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையை மாற்ற வேண்டும்

மாநகராட்சி நிா்வாகம் விசாரணைக்குரிய ஆவணங்களை, விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போதைய புதிய அரசு வரி விதிப்பு முறைகேட்டில் முறையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபா்களை பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் சோலை எம்.ராஜா தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாரை சந்தித்து தங்கள் பகுதியில் நிலவும் மக்கள் பிரச்னைகள் குறித்து கோரிக்கை மனுக்களை அளித்தனா்.