புலையர் இன மக்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான டில்லிபாபு தலைமை வகித்துப் பேசியதாவது: கடந்த 1976 ஆம் ஆண்டு வரையிலும் புலையர் சமூகம், பழங்குடியினர் பட்டியலில் இருந்து வந்தது. அதன்பின்னர், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, புலையர் சமூகத்தை ஆதிதிராவிடர் இன பட்டியலில் இணைத்து விட்டனர். இதனால் அரசின் நலத்திட்ட உதவிகளை புலையர் இன மக்களால் பெற முடியாத நிலை உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்திய பின், நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள பழங்குடியின ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, புலையர் இன மக்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்து, கடந்த 2013ஆம் ஆண்டு தமிழக அரசுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த ஆய்வறிக்கையை தமிழக அரசு இதுவரையிலும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பவில்லை.
இதனால், திண்டுக்கல், தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 15 ஆயிரம் புலயர் இன மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த மக்களின் எதிர்காலம் கருதி, அந்த அறிக்கையை உடனடியாக நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்றார். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலர் என்.பாண்டி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், செயலர் செல்லையா, திண்டுக்கல் ஒன்றியச் செயலர் தா.அஜாய், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் சரண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.