கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரியில் நீர் மட்டம் உயர்ந்து வருவதையடுத்து, அங்கிருந்து தண்ணீரை திறந்து விடப்படுகிறது. இதையடுத்து கரையோர பொது மக்களுக்கு, நகராட்சி சார்பில் புதன்கிழமை தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த 2- ஆம் தேதியிலிருந்து பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே நகரின் மையப் பகுதியிலுள்ள ஏரியில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பின் 17 ஆண்டுகள் கழித்து ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 36 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் தற்போது 34 அடி நீர் மட்டம் உள்ளது.
மழை நீடித்தால் மேலும் நீர்மட்டம் உயரும் என்பதால் வியாழக்கிழமை ஏரியிலுள்ள கதவணை திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து நீரோடை கரையோரப் பகுதிகளிலுள்ள பொது மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க முன் கூட்டியே டாம், டாம் ஒலி எழுப்பி தண்டோரா மூலம் லாஸ்காட் சாலை, பெர்ன்ஹில் சாலை, உள்ளிட்ட பகுதிகளில் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது: தொடர் மழை பெய்து வந்தாலும், அப்சர்வேட்டரியிலுள்ள குடிநீர்த் தேக்கம், மனோ ரஞ்சிதம் அணை ஆகியவை நிரம்ப வில்லை. ஏரியிலும் முழுமையாக தண்ணீர் நிரம்ப வில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி கதவணை மூலம் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.