காவிரி புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் பெற நடவடிக்கை: ஆட்சியர்
காவிரி புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 3 மாதங்களில் 480 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
காவிரி புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 3 மாதங்களில் 480 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
கரூர் அடுத்துள்ள புதுப்பாளையம் மற்றும் மாயனூர் காவிரி ஆற்றிலிருந்து, திண்டுக்கல் மாவட்டத்துக்கான கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதுப்பாளையம் மற்றும் மாயனூர் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய், குடிநீர் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம், நிலக்கோட்டை மற்றும் அம்மையநாயக்கனூர் ஆகிய 3 பேரூராட்சிகள் மற்றும் 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 1,276 ஊரகக் குடியிருப்புகளுக்கு மாயனூர் காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் வழங்கப்பட உள்ளது.
நாளொன்றுக்கு 480 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில், திருக்காம்புலியூர், கோட்டைக்காரன்பட்டி, குஜிலியம்பாறை, கோவிலூர், வடமதுரை மற்றும் ரெட்டியார்சத்திரம் ஆகிய இடங்களில் நீர் உந்து நிலையங்களும், பல்வேறு இடங்களில் இடைநிலை நீர் உந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
குழாய் பதிக்கும் பணிகள் புதிய நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் பகிர்மானக் குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. இதற்கு தேவையான 87 மின் இணைப்புகளில் 83 இணைப்புகள் பெறப்பட்டுள்ளன. மேலும், 12 இடங்களில் தேவைப்படும் 24 மணி நேர மின் இணைப்புகளில் 2 இடங்களுக்கு இணைப்புகள் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள மின் இணைப்புகளை துரிதமாகப் பெறப்படும்.
33 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட்டு, நத்தம் பேரூராட்சி மற்றும் 170 ஊரகக் குடியிருப்புகளுக்கு சோதனை நீரோட்டம் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 66 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட்டு, 461 ஊரகக் குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் என்றார்.
ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியச் செயற்பொறியாளர்கள் ரவீந்திரன், முகமது பரூக், உதவிச் செயற்பொறியாளர் பிரபுராம் ஆகியோர் உடனிருந்தனர்.