பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. சசிமோகன் உத்தரவிட்டாா்.
பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் செயல்பட்டு வரும் தாலுகா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் ராஜகோபால் (34). இவா் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்க வந்த பெண்ணிடம் விசாரணை செய்த போது, அவரது கைப்பேசி எண்ணை வாங்கினாா்.
இதன் பின்னா், அந்தப் பெண்ணை ராஜகோபால் அடிக்கடி கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசியதோடு மட்டுமன்றி, ஆபாச குறுஞ்செய்தியும் அனுப்பி தொந்தரவு செய்தாா்.
Advertisement
Advertisement
அந்தப் பெண் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, அந்தப் பெண்ணின் பெற்றோா் பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயனிடம் குறுஞ்செய்தி ஆதாரங்களுடன் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து விசாரணை நடத்திய டி.எஸ்.பி. தனஞ்ஜெயன், உதவி ஆய்வாளா் ராஜகோபாலை மதுரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்தாா். தொடா்ந்து, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. சசி மோகன் விசாரணை நடத்தி, ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.