மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.75 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடடம் 10 நாள்களுக்குள் திறக்கப்படும் என்று சுகாதார துறை வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளன.
மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சைப் பிரிவு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் இடநெருக்கடியைப் போக்கும் வகையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.75 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கு 6 தளங்கள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கட்டடம் இதுவரை திறக்கப்படவில்லை.
கட்டடம் விரைவில் திறக்கபடலாம் என்ற எதிர்ப்பார்ப்பில், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் உள்ள பல்வேறு கருவிகள் அகற்றப்பட்டு புதிய கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் பழுதடைந்த கருவிகள் மற்றும் குளிர்சாதன இயந்திரங்களும் சரிபார்க்கப்படவில்லை. இதனால் பச்சிளம் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. மேலும் பிரசவ சிகிச்சைப் பிரிவில் உள்ள நவீன அறுவை சிகிச்சை கருவிகளும், புதிய கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுவைச் சிகிச்சை அரங்குக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் பிரசவ சிகிச்சைப் பிரிவிலும் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கட்டடத் திறப்பு விழா தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் தமிழக முதல்வர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், 10 நாள்களுக்குள் புதிய கட்டடம் திறக்கப்படுவது உறுதி என்றும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.