கீழவளவு அருகே பாசனக் கண்மாயில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்துச் சென்ற வகையில், அரசுக்கு ரூ. 287.83 கோடிக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தின் மீது, மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிக்கை புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கீழவளவு அருகே உள்ள வேப்பங்குடி கண்மாயில் சட்டவிரோதமாக கிரானைட் பாறைகளை வெட்டிக் கடத்தியது சம்பந்தமாக, கீழவளவு போலீஸார் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் பி. பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி, மகன்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார், துணைக் காவல் கண்காணிப்பாளர் குருசாமி தலைமையில் குற்றப்பத்திரிக்கை தயாரித்தனர். அதில், 2,769 பக்கமுள்ள குற்றப்பத்திரிக்கையை அரசு சிறப்பு வழக்குரைஞர் ஷீலா மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், கீழவளவு அருகே உள்ள பெரிய இளஞ்சிக் கண்மாய் கால்வாயில் கிரானைட் கற்களை பதுக்கி வைத்தது, கால்வாயைச் சேதப்படுத்தியது தொடர்பாக, அரசுக்கு ரூ. 60 லட்சம் இழப்பை ஏற்படுத்தியதாகவும், சின்ன இளஞ்சிக் கண்மாயில் கிரானைட் கழிவுக் கற்களை குவித்து வைத்து, நீர் தேங்கவிடாமல் விவசாயத்தை பாதிப்படையச் செய்ததாகவும், இதனால் அரசுக்கு ரூ.124 கோடிஇழப்பு ஏற்படுத்தியதாகவும் மற்றும் மேலும் இரு வழக்குகளில் 384 பக்கமுள்ள குற்றப் பத்திரிக்கைகள் தாக்கல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.