லஞ்ச வழக்கு: தபால் உதவி கண்காணிப்பாளர் விடுதலையை ரத்து செய்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு
லஞ்ச வழக்கில் சிவகாசி தபால் அலுவலக உதவி கண்காணிப்பாளரை விடுதலை செய்த கீழ் நீதிமன்ற
லஞ்ச வழக்கில் சிவகாசி தபால் அலுவலக உதவி கண்காணிப்பாளரை விடுதலை செய்த கீழ் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சிவகாசி தலைமை தபால் நிலையத்தில் உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் கருணாகரன். கடந்த 2009 இல் சிவகாசியில் கணேஷ் பாண்டி உள்பட 4 பேர் தபால்காரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பணிக்கான உத்தரவை தர, தனக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கணேஷ்பாண்டியிடம், உதவி கண்காணிப்பாளர் கருணாகரன் கேட்டுள்ளார். ஆனால் கணேஷ் பாண்டி தனது வறுமையை காரணம் காட்டி, அந்த தொகையை தர இயலாது என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் கணேஷ் பாண்டி பணியில் சேர்ந்து வேலை பார்த்து வந்தார். ஆனாலும் கருணாகரன் ரூ.20 ஆயிரம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக கணேஷ் பாண்டி சிபிஐயிடம் புகார் தெரிவித்து உள்ளார். அதையடுத்து சிபிஐ அதிகாரிகள் தெரிவித்த ஆலோசனையின்பேரில் முதல் கட்டமாக ரூ.5 ஆயிரம் தருவதாக கருணாகரனிடம் தெரிவித்துள்ளார். இதை நம்பிய கருணாகரன், ரூ. 5 ஆயிரத்தை வாங்கியபோது சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, கருணாகரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, லஞ்ச வழக்கில் கருணாகரனை விடுதலை செய்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, கருணாகரனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.