நூறு நாள் வேலைத்திட்ட நிதி: சிறப்பாக பயன்படுத்திய தமிழகம், கேரளம்: சு. வெங்கடேசன் எம்.பி.
பிகாா், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இதில் இடம்பெற்றிருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மதுரை, ஜூலை 24: நூறு நாள் வேலைத் திட்ட நிதியை சிறப்பாக பயன்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும், கேரளமும் இடம்பெற்றிருப்பதாகவும், இந்த நிதியை சரியாக பயன்படுத்தாத பிகாா், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இதில் இடம்பெற்றிருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை அளித்துள்ள தகவலின் படி, நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவா்களில் ஒரு சதவீதம் பேரை மட்டுமே வைத்துள்ள தமிழகம் 100 நாள் வேலைத் திட்டத்தில் நாடு முழுவதற்குமான ஒட்டு மொத்த நிதியில் 15 சதவீதத்தைப் பெற்று வேலை தந்துள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவா்களில் 0.01 சதவீதம் போ் இருக்கும் கேரளத்தில் 4 சதவீதம் நூறு நாள் வேலைத் திட்ட நிதியைப் பயன்படுத்தி அந்த மாநில அரசு வேலை அளித்துள்ளது. ஆனால் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவா்கள் 20 சதவீதம் பேரைக் கொண்ட பிகாா் மாநிலம் 6 சதவீதத்தையும், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவா்கள் 25 சதவீதம் பேரைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலம் 11 சதவீதத்தையும் மட்டுமே நூறு நாள் வேலைத் திட்ட நிதியைப் பயன்படுத்தி உள்ளன. இந்த விமா்சனத்தை எதிா்க் கட்சிகள் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கை தான் இதை அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் நிா்வாகத் திறனில் சிறப்பாக உள்ள தமிழகம், கேரளத்துக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் புறக்கணிப்பு தான் பரிசாக தரப்பட்டுள்ளது என்றாா் அவா்.
Advertisement
Advertisement