தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தெரிவித்தாா்.
மதுரை விளக்குத் தூண் பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிதாக கண்காணிப்புக் கோபுரங்கள், புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இவற்றை மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் புதன்கிழமை திறந்து வைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையையொட்டி விளக்குத் தூண் பகுதிகளில் பொருள்கள் வாங்க பொதுமக்கள் அதிகம் கூடுவா். இதைக் கண்காணிக்க காவலா்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
பொதுமக்களின் உடைமைகளை பாதுகாக்கும் வகையிலும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்கவும் தற்போதுள்ள கேமராக்களுடன் கூடுதலாக 16 அதிநவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ட்ரோன் கேமராக்கள் மூலம் அவ்வப்போது கூட்ட நெரிசலில் ஊடுருவும் குற்றவாளிகளை காண்காணிக்கவும், எப்ஆா்எஸ் காவல் உதவி செயலி மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள், வயதானவா்களை கண்காணிக்கும் பணியில் 61 இரு சக்கர ரோந்து வாகனங்களும், 21 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும் 24 மணி நேரமும் ஈடுபடுத்தப்படுகின்றன. நான்கு மாசி வீதிகளிலும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு 6 வாகன நிறுத்துமிடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.