நீட் தேர்வு முறையை தொடக்க நிலையிலேயே தடுக்க திமுக போராடும் என திமுக கொள்கைப் பரப்புச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசினார்.
ராமநாதபுரத்தில் மாவட்ட திமுக சார்பில், இந்தி திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், நீட் தேர்வுக்கு தமிழகத்திலிருந்து விலக்கு அளிக்கவும் வலியுறுத்தும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலர் சுப.த.திவாகர் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், வ.சத்தியமூர்த்தி, தென்னவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கருத்தரங்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியது: மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கமாக திமுக இருந்து வந்துள்ளது. கடந்த 100 ஆண்டு காலத்தில் திமுக சந்திக்காத போராட்டங்களே இல்லை. ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அந்த மொழி வளருமே தவிர தமிழ் மொழியின் மகத்துவம் பலருக்கும் தெரியாமல் போய் விடும். தமிழர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியன அழிந்து போகவும் வாய்ப்பிருக்கிறது.
அதே போல நீட் தேர்வை இந்த ஆண்டு முதல் மத்திய அரசு அமல்படுத்தியிருக்கிறது. இதை தொடக்கத்திலேயே தடுக்கவும் திமுக போராடி வருகிறது என்றார்.
கருத்தரங்கில் மதுரை எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் நீட் தேர்வு தொடர்பாக பேசினார்.நகர் செயலாளர் ஆர்.கே.கார்மேகம் வரவேற்றார். முன்னாள் எம்.பி. எம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகவேல்,திசைவீரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.