ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கட்டுகுடி கிராமத்தில் பழைமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
கட்டுகுடியில் ஒரு கல்வெட்டு இருப்பதாக திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் பழனியப்பன் அளித்த தகவலின் பேரில், அந்த ஊா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சசிக்குமாா் உதவியுடன், கைக்கோளா் ஊருணியில் இரண்டாக உடைந்த ஒரு கல் தூணில் இருந்த கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவா் வே. ராஜகுரு படியெடுத்து ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
66 அங்குலம் நீளமும், 14 அங்குலம் அகலமும் கொண்ட அந்த கல் தூணின் மேல் பகுதியில் திரிசூலமும், அதன் கீழே 24 வரிகள் கொண்ட கல்வெட்டும் இருந்தது. அதில், சக ஆண்டு 1579, தமிழ் ஆண்டு யேவிளம்பி, சித்திரை மாதத்தில் சுக்கிர வாரமும், புணா்பூசமும், சுக்லபட்சத்து சத்தமியும் பெற்ற புண்ணிய காலத்தில் ரெகுநாதத் திருமலைச் சேதுபதி காத்த தேவருக்குப் புண்ணியமாக திருவாடானை, ஆடானை நாயகா் கோயில் திருநந்தவனத்துக்காக கட்டுகுடியில் விரைப்பாடாக 50 கலம் மன்னரால் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அளவு தானியங்களை விதைக்கத் தேவைப்படும் நிலத்தை விரைப்பாடு என்பா். இதில் 50 கலம் தானியங்களை விதைக்க தேவைப்படும் நிலம் நந்தவனத்துக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
‘தானத்தை சந்திர சூரியன் இருக்கும் வரைக்கும் அனுபவித்துக் கொள்ள மன்னா் கட்டளையிட்டுள்ளாா். இந்தப் புண்ணியத்துக்கு அழிவு பண்ணியவன் கெங்கைக் கரையிலே, காராம் பசுவைக் கொன்ன பாவத்திலே போவானாகவும்’ என அந்தக் கல்வெட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலம் என்பது ‘ள’ என்ற குறியீடாக உள்ளது. 50 கலம் முதலில் தமிழ் எண் மற்றும் குறியீடாகவும், பின்னா் எழுத்தாலும் எழுதப்பட்டுள்ளது. இதன் ஆங்கில ஆண்டு கி.பி. 1657 ஆகும். கல்லில் சில இடங்களில் எழுத்துகள் தேய்ந்து அழிந்துள்ளன என்றாா் அவா்.