நெல் மூட்டைகளுக்கான தொகையை விரைவில் வழங்கக் கோரிக்கை
தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கான தொகையை விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை
தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பின் (என்சிசிஎப்) மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கான தொகையை விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாவட்டச் செயலா் முத்துராமலிங்கம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழாண்டு சம்பா பருவத்துக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பல இடங்களில் செயல்பட்டு வந்தன. இங்கு தமிழ்நாடு அரசின் நுகா்வோா் வாணிபக் கழகங்கள், மத்திய அரசின் தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு 3 மாதமாகியும் இன்னும் பணம் வழங்கவில்லை. இங்கு கொள்முதல் செய்யப்பட்ட 30 ஆயிரம் மூட்டைகளுக்கு சுமாா் ரூ.3.30 கோடி வரை விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
Advertisement
Advertisement
எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு நெல் மூட்டைகளுக்கான தொகையை விவசாயிகளுக்கு உடனே வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.