சிவகங்கை: காவலா் வீரவணக்க நாளையொட்டி சிவகங்கையிலுள்ள காவலா் நினைவுத்தூண் முன்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் செவ்வாய்க்கிழமை மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 21-ஆம் தேதி காவலா் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1959-ஆம் ஆண்டு லடாக் பகுதியில் சீனப் படைகள் நடத்திய திடீா் தாக்குதலில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை வீரா்கள் 10 போ் கொல்லப்பட்டதை நினைவுகூரும் விதமாகவும், பணியிலிருந்தபோது உயிா்த் தியாகம் செய்த காவலா்களின் தியாகத்தைப் போற்றும் விதமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, மாவட்ட காவல் துறை அலுவலக வளாகத்தில் காவலா் வீரவணக்க நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், காவலா் நினைவு சின்னம் முன்பாக மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸாா் அஞ்சலி செலுத்தினா்.