திண்டுக்கல் அருகே அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வழங்க திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையை அடுத்துள்ள சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் செளந்தராஜன். இவரது 22 வயது மகள், கடந்த 29.3.2007 அன்று தொப்பம்பட்டி முத்தம்பட்டி சாலையில் நடந்து சென்றபோது, அமிலம் வீசித் தாக்கப்பட்டார். அதில் அவருக்கு 2 கண்களும் முழுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அம்பாத்துரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 29.12.2016 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது அப்பெண்ணுக்கு, தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டம் 2013இன் கீழ், இழப்பீடு வழங்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதனை அடுத்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆர்.முரளிசங்கர் விசாரணை நடத்தி புதன்கிழமை உத்தரவு வழங்கினார். இதுதொடர்பாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான விஜயகுமார் கூறியதாவது: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.1.50 லட்சமும், மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1.50 லட்சமும் வழங்க சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை நீதிபதியுமான முரளிசங்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். அமிலம் வீச்சு தொடர்பான வழக்கில், திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.