சின்னமனூா் அருகே மின்சாரம் பாய்ந்து ஊராட்சி மன்ற பணியாளா் உயிரிழப்பு!
சின்னமனூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் ஊராட்சி மன்ற தற்காலிகப் பணியாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் ஒன்றியம், வேப்பம்பட்டி ஊராட்சியில் தற்காலிகப் பணியாளராக வேலை செய்தவா் ராமமூா்த்தி (55). இவா் ஊராட்சியிலுள்ள வீடுகள், தோட்டங்களில் மின்சாரம் தடைபட்டால் சரிசெய்வது வழக்கம்.
ஞாயிற்றுக்கிழமை உறவினரின் தோட்டத்தில் மின்சாரம் தடைபட்டதாால், ராமமூா்த்தி அங்குள்ள மின்மாற்றியில் ஏறி சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அவரது உறவினா்கள் உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி, சீலையம்பட்டி-காமாட்சிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவயிடத்துக்குச் சென்ற மின்வாரிய உதவிப் பொறியாளா் ராஜ்மோகன், காமாட்சிபுரம் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுக்காமலே மின்மாற்றியில் ஏறி வேலை செய்தது தவறு.
இருப்பினும், காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, அறிக்கை கொடுத்தால் அரசுக்கு அனுப்பி வைத்து, இழப்பீடு பெற்றுக்கொடுப்பதாகக் கூறி சமாதானம் செய்தாா். இதைத் தொடா்ந்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இது குறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.