அருப்புக்கோட்டை நகரில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. அனைத்துப் பகுதிகளுக்கும் சேர்த்துக் குடிநீர் வழங்க நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை உள்ளது. இதற்காக திருப்புவனத்திலிருந்தும், தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமாகவும் நீர் பெறப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் திருப்புவனத்திலிருந்து நீர் பெறுவது நிறுத்தப்பட்டது. எனினும் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் குடிநீர் வீதம் தாமிரவருணித் திட்டத்தின் மூலம் பெறப்பட்டது.
இந்நிலையில், வறட்சி காரணமாக மார்ச் மாதம் முதல் அதுவும் முற்றிலும் குறைந்தது. இதனால் அணையிலிருந்து குடிநீருக்காக நீர் திறந்துவிட அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மேற்கொண்ட நடவடிக்கையால் கடந்த ஏப்ரல் மாதம் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது 15 நாட்களை கடந்தும் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் அதிக விலை கொடுத்துக் குடிநீரை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நகராட்சி தரப்பிலிருந்து எப்போது மீண்டும் குடிநீர் வழங்கப்படும் என உறுதிபடக் கூற மறுப்பதால், அருப்புக்கோட்டை நகரெங்கும் நகராட்சியைக் கண்டித்தும், குடிநீர் தட்டுப்பாட்டை விரைவில் சரிசெய்ய கோரிக்கை விடுத்தும் பாஜகவினர் சுவரொட்டிகள் மூலம் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.