அருப்புக்கோட்டை வழியாக திருச்செந்தூருக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவேண்டுமென மதுரை மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மண்டல போக்குவரத்துக் கழகம் மூலம் மதுரை, அருப்புக்கோட்டை, தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. அருப்புக்கோட்டை நகருக்குள் வந்து செல்லும் வகையில் 20 நிமிடத்திற்கு ஒரு பேருந்து வீதம் இயக்கப்பட்டதால் திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்கள், அருப்புக்கோட்டையிலிருந்து தூத்துக்குடிக்கு பல்வேறு அலுவலகப் பணிகளுக்குச் செல்வோர் என நாள்தோறும் சராசரியாக 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்து வந்தனர். ஆனால் தற்போது இப்பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அருப்புக்கோட்டை நகருக்குள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே வந்து செல்கிறது. இதனால் திருச்செந்தூர், தூத்துக்குடி செல்லும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதுடன் கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டையிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர்கள் தொலைவிற்கும் (சுமார் நான்கு மணி நேரம்) நின்றுகொண்டு பயணிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது குழந்தைகள்,
வயதானோர்க்கு மிகவும் சிரமத்தைத் தருகிறது.மேலும் கோயில் திருவிழாக் காலங்களில் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை நகர், தூக்குக்குடி வழியாகக் கூடுதல் பேருந்துகளை இயக்க விரைவான நடவடிக்கை தேவை என, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களும், பிற பயணிகளும் மதுரை மண்டல போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.