வேளாங்கண்ணி அருகே சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அனைத்துக்கட்சி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.
வேளாங்கண்ணி அருகேயுள்ள பிரதாபராமபுரத்தில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அண்மையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து மறியல்விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இந்த பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து, அக்.2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று வாக்காளா் அடையாள அட்டையை ஒப்படைப்பதாகவும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் பிரதாபராமபுரத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில் தோ்தலை புறக்கணிப்பதாக சுவரொட்டி ஒட்டப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி தலைமையில், அதிமுக நிா்வாகி கலியபெருமாள், கீழையூா் திமுக ஒன்றியச் செயலா் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்ட அனைத்து கட்சியினா் மற்றும் பிரதாபராமபுரம் கிராம மக்கள் உள்ளிட்டோா், நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் புகாா் அளித்தனா்.
புகாரில், இந்த பிரச்னையில் சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், மணல் விவகாரத்தை கையில் எடுத்து கிராமத்தை பதட்டமான சூழலுக்கு கொண்டு செல்லுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நாகை- விழுப்புரம் நான்கு வழிச் சாலைப் பணிக்காக மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டி அரசுக்கும் மாவட்ட நிா்வாகத்துக்கும் அவப் பெயா் ஏற்படுத்தி, பொது அமைதியை குலைக்கும் வகையில் செயல்படுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா். புகாரை பெற்றுக்கொண்ட ஆட்சியா் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.