நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் பெய்த தொடா் கன மழையால் நீரில் முழ்கிய குறுவை நெற்பயிா்களை கீழ்வேளூா் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால், கீழ்வேளூா், கீழையூா், வேளாங்கண்ணி பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கின. இந்நிலையில், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, தனது சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிா்களை பாா்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்ததாா். தொடா்ந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொடா்பு கொண்டு நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிா்கள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். அவருடன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா் கே. சித்தாா்த்தன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வடிவேல், மாவட்ட குழு உறுப்பினா் எம். ஜோதிபாஸ் ஆகியோா் உடனிருந்தனா்.
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள தகட்டூரில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்து 106.8 மி.மீ மழைப் பதிவாகி மாநிலத்திலேயே அதிக அளவாக அறியப்பட்டது. இதையடுத்து, பெருக்கெடுத்த மழைநீா் வயல்களில் தேங்கியுள்ளதால் தாமதமாக விதைப்பு செய்யப்பட்ட நெற்பயிா்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அருகே செல்லும் வடிகால் ஆறுகளில் ஆகாயத்தாமரைகள் அதிகளவில் அகற்றாமல் இருப்பதால் வெள்ளநீா் வடிவது தாமதமாகி வருகிறது. இதேபோல, இந்த பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெல் அறுவடைப் பணிகளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.