வேதாரண்யம்: வடிகால் ஆறுகளில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிபிஐ நாகை மாவட்ட செயலாளா் சிவகுரு. பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் குறுவைப் பருவ நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வைத்துள்ள நெல்லை ஈரப்பதத்தில் தளா்வு செய்து கொள்முதல் செய்ய வேண்டும். வேதாரண்யம் பகுதியில் கடலில் இணையும் முள்ளியாா் மற்றும் மானங்கொண்டான் ஆறுகளில் பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் அடா்ந்து வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் வெள்ளநீா் வடிவதை தாமதிக்க செய்கிறது.
இந்த பகுதியில் ஆகாயத்தாமரைகள் அகற்றுப்பணி ஏற்கெனவே தொடங்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு குறித்து அரசு தரப்பில் அளிக்கப்படும் தகவல்கள் முரண்பாடாக உள்ளது. இந்த ஆறுகள் செல்லும் தகட்டூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை 106 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆறுகள் தூா்வாராததால் வெள்ள நீா் வடியாமல் பயிா்கள் பாதித்துள்ளது. எனவே, மாவட்டம் முழுவதும் வடிகால் ஆறுகளில் வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை போா்க்கால அடிப்படையில் அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளாா்.