திருமலைராயன்பட்டினம் பகுதியில் கடற்கரை செல்லும் சாலையில் திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி, மீனவர்கள் உள்ளிட்ட கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
காரைக்காலில் உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மூடப்பட்ட மதுக்கடைகளை, தேசிய நெடுஞ்சாலைப் பகுதி அல்லாத இடங்களில் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீசுவரர் கோயிலில் இருந்து பட்டினச்சேரி மீனவ கிராமத்துக்குச் செல்லும் வழியில் ரயில் நிலையம் அருகே ஒரு மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த கடை அமைவதற்கு முன்பே பட்டினச்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனினும் கலால் துறையின் அனுமதியின்பேரில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு கடை திறக்கப்பட்டது. கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் கடையை உரிமையாளர் மூடிவைத்திருந்தார்.
இந்த நிலையில், புதன்கிழமை கடை திறக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது.
இதைக் கண்டித்து பட்டினச்சேரி மீனவ கிராம பெண்கள் உள்ளிட்ட சுமார் 200 பேர் திரண்டு வந்து, கடையை மூடுமாறு வலியுறுத்தி பட்டினச்சேரி செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து அந்த பகுதிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து பட்டினச்சேரி மீனவ கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் எஸ்.டி.பி. திராவிடமணி கூறியது: பட்டினச்சேரியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இதுநாள் வரை இந்த பகுதியில் மதுக்கடை எதுவும் அமைக்கப்படாமல் இருந்த நிலையில், புதிதாக கடை அமைவதை ஏற்க முடியாது. கடையை இந்த பகுதியிலிருந்து அகற்ற வேண்டும். இதில் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டினால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.