இந்திய கட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
இந்திய கட்டுநர் சங்க காரைக்கால் மையம் (பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா) 2018-19 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காரைக்காலில் நடைபெற்றது.
இந்திய கட்டுநர் சங்க காரைக்கால் மையம் (பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா) 2018-19 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காரைக்காலில் நடைபெற்றது.
தலைவராக ஆர்.ஜி.பாபுஜி, துணைத் தலைவராக எஸ்.முருகன் என்ற இளம்பரிதி, கௌரவ செயலர் ஜெ.சிவகுமார், கௌரவ பொருளர் எம்.ஜெ.ரவிச்சந்திரன், இணைச் செயலர் பி.மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் என்.அன்பழகன், என்.மணிவண்ணன், உறுப்பினர் வளர்ச்சிக் குழுத் தலைவர் எஸ்.முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வி.சண்முகசுந்தரம் கலந்துகொண்டு பேசியது : அரசு நிதி நெருக்கடியை சந்திக்கிறது. எனினும் ஒப்பந்ததாரர்களுக்கு பணிக்காக தரவேண்டிய நிதியை வழங்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. கண்டிப்பாக அதனை பொதுப்பணித்துறை நிறைவேற்றும்.
நிர்வாகத்தில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்வது அவசியமாகிறது. அதன்படி பார்த்தால், பணியாணை இல்லாமல் எந்தவொரு பணியையும் ஒப்பந்ததாரர்கள் செய்யக்கூடாது. எந்தவொரு அவசரப் பணியானாலும் பணியாணை அவசியம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டும். பணியாணை வழங்கப்பட்ட பணிகளுக்கே பல கோடி ரூபாய் நிலுவை இருக்கிறது. பணியாணை இல்லாமல் செய்யும் பணியினால், பாதிக்கப்படுவது ஒப்பந்ததாரர்களாக இருக்கிறார்கள். எனவே எனது அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்றவேண்டும். ஒட்டுமொத்த புதுவையின் மேம்பாட்டுக்கு அனைவரும் பாடுபடவேண்டும் என்றார் அவர்.
கட்டுநர் சங்க அகில இந்திய தலைவர் எம்.திருசங்கு, மாநில தலைவர் ஏ.ஐயப்பன், துணைத் தலைவர் மோகன், காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.சேகர், செயற்பொறியாளர்கள் ஏ.ராஜசேகரன், எஸ்.மதிவாணன் உள்ளிட்ட பலர் பேசினர். ஜெ.சிவகுமார் நன்றி கூறினார்.