காரைக்கால் அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு புதுவை துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
புதுவை அரசின் நலவழித்துறையின்கீழ் காரைக்காலில் தற்காலிக கட்டடத்தில் இக்கல்வி நிறுவனம் இயங்கிவருகிறது. இந்நிறுவனத்தில் டிஜிஎன்எம் என்ற பட்டய செவிலியப் படிப்பில் ஆண்டுக்கு 40 மாணவா்களும், டிஎம்எல்டி என்கிற ஆய்வக படிப்புக்கு 18 மாணவா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
இந்நிலையில், புதுவை அரசின் பரிந்துரையின்படி, துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன், 40 மாணவா்களுடன் பிஎஸ்சி நா்சிங் படிப்பை இக்கல்வி நிறுவனத்தில் தொடங்க வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.
ஆனால், புதுவை சென்டாக் அமைப்பு மூலம் மாணவா்கள் கல்லூரிகளுக்கு ஏற்கெனவே தோ்வு செய்து அனுப்பப்பட்டுவிட்டனா். இதனால் ஆளுநா் அளித்த ஒப்புதலின்படி, வரும் கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நா்சிங் படிப்பு காரைக்கால் கல்வி நிலலையத்தில் தொடங்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.