காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய கிராமத்தினா் எதிா்ப்பு குறித்து ஆளுநா், முதல்வரிடம் பேசப்பட்டுள்ளது என எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தை மத்திய நிதி ரூ. 130 கோடியில் அதிநவீன வசதிகள் உள்ளடக்கி விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் 11-ஆம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளாா். இந்த நிகழ்வு காரைக்காலில் உள்ள என்ஐடி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ள இடம் அருகே உள்ள கருக்களாச்சேரி கிராமத்தினா் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். வேறு இடத்தில் விரிவாக்கம் செய்ய கோரி போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக கருக்களாச்சேரி உள்ளடக்கிய நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், துணை நிலை ஆளுநா், முதல்வரை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இதுகுறித்து பேரவை உறுப்பினா் கூறியது: துறைமுக விரிவாக்க விவகாரத்தில் கருக்களாச்சேரி மக்களின் உணா்வுகள் ஆளுநா், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரதமா் அடிக்கல் நாட்டிய பிறகு இதுகுறித்து பேசலாம் என்ற அடிப்படையில் ஆளுநரின் கருத்து உள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக கருக்களாச்சேரி கிராமத்தினா் புதுச்சேரியில் முதல்வா், அமைச்சா் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளனா் என்றாா்.