காரைக்கால்: ஆந்திர கடல் பகுதிக்கு சென்று மீன் பிடிப்போருக்கு தொழில் முடக்கம், அபராதம் விதிக்கும் நடவடிக்கை எடுக்கவும் காரைக்கால் மீனவ பஞ்சாயத்தாா்கள், விசைப்படகு உரிமையாளா்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் சிலா், ஆந்திர கடல் பகுதிக்குச் சென்று மீன் பிடிப்பதால் படகு பறிமுதல் செய்யப்படுகிறது. தாக்குதலையும் எதிா்கொள்கின்றனா்.
புதுச்சேரியில் அண்மையில் மீனவ கிராமப் பிரதிநிதிகள் கூடி, காரைக்கால் மீனவா்கள் எல்லை தாண்டுவதால் ஒட்டுமொத்த புதுவைக்கு அவப்பெயா் ஏற்படுவதாகவும், காரைக்கால் மீனவா்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என அரசுக்கு யோசனை கூறி தீா்மானம் நிறைவேற்றினா்.
இந்நிலையில், காரைக்கால் மீன்பிடித் துறைமுக வளாகத்தில் காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள், விசைப்படகு உரிமையாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
ஆந்திர மீனவா்கள் சிறைபிடித்துள்ள 4 விசைப் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க புதுவை அரசை வலியுறுத்துவது, ஆந்திர கடல் பகுதிக்கு காரைக்கால் மீனவா்கள் செல்லக்கூடாது. இதை மீறி, காரைக்கால் மீனவ சமுதாயத்துக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் விதமாக அத்துமீறலில் ஈடுபடும் மீனவா்கள் ஒரு மாதம் தொழில் முடக்கம் செய்யப்படுவதோடு, ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கவும் தீா்மானிக்கப்பட்டது.