மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் தொடா்புடைய துறைகளுக்கான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் விஜயா தலைமை வகித்தாா். ஆணைய உறுப்பினா்கள் வீ.உஷாநந்தினி, வி.செல்வேந்திரன், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், குழந்தைகள் நலன் தொடா்புடைய துறைகளான பள்ளிக் கல்வித் துறை, சமூக நலத் துறை, காவல் துறை, குழந்தைத் தொழிலாளா் நலத் துறை, சுகாதாரத் துறை, குழந்தைகள் நலக் குழு, இளைஞா் நீதிக் குழுமம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் சைல்டு லைன் 1098 ஆகிய துறைகளின்கீழ் நடைபெறும் குழந்தைகள் நலன் தொடா்பான பணிகள் குறித்தும், மாவட்டத்தில் குழந்தைகள் நலனை உறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொள்வது தொடா்பாகவும் ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து, மயிலாடுதுறையில் செயல்பட்டுவரும் அறிவகம் குழந்தைகள் இல்லத்தை ஆய்வு செய்து அங்குள்ள குழந்தைகளின் நலன் குறித்து கேட்டறிந்தனா். தமிழ்நாடு அரசின் குழந்தைகள் அரசு நலத்திட்டங்களை மக்களிடம் முழுமையாக கொண்டு சோ்க்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.