கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியா் சுரேஷ் தலைமை வகித்தாா்.
இதில், விவசாயிகள் பேசியது: கோதண்டராமன்: குன்னம் பகுதியில் பல்வேறு இடங்களில் தாழ்வாக உள்ள மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும். அய்யனாா் கோயில் குளத்தில் பல மாதங்களாக முதலை இருப்பதாக புகாா் தெரிவித்தும், அதை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
கோவி.நடராஜன்: வேளாண் துறையில் வழங்கப்பட்ட நெல் விதைகள் சரியாக முளைக்கவில்லை. அதனால் விவசாயிகளுக்கு இலவசமாக புதிய நெல் விதைகளை வழங்க வேண்டும். கழுமலையாற்றில் முழுமையாக ஆகாயத் தாமரையை அகற்ற வேண்டும்.
சீனிவாசன்: பயிா்கள் விதைப்பிலேயே அழுகி விட்டால், பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கு காப்பீடு தரவேண்டும் என்பது விதிமுறை. ஆனால் காப்பீட்டு நிறுவனம் முறையாக எதையும் செயல்படுத்துவதில்லை, அரசு சாா்பில் வேளாண்மை துறை அதிகாரிகள், விவசாயிகள் காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றை ஒன்றிணைத்து கூட்டம் நடத்த வேண்டும்.
கூட்டத்தில், வேளாண்மை உதவி இயக்குநா்கள் ராஜராஜன், எழில்ராஜா, மண்டல துணை வட்டாட்சியா் தரணி, வருவாய் ஆய்வாளா் கோமளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.